Friday, September 12, 2014

மேகங்கள் என்னைத் தொட்டு - Megangal ennaithottu

மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு 
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு 
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு 
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு 

மோகனமே உன்னைப் போல என்னை யாரும் 
மூச்சு வரை கொள்ளையிட்டு போனதில்லை 
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப்போல 
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை  (மேகங்கள்...)

பிரிவொன்று நேரும் என்று தெரியும் பெண்ணே 
என் பிரியத்தை அதனால் குறைக்கமாட்டேன் 
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே 
என் இளமைக்கு தீயிட்டு எரிக்கமாட்டேன் (மேகங்கள்...)

கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் 
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடைய கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன் (மேகங்கள்...)

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று
அடி தினம்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் 
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும் 
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் 
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன் 
இவ்வாறு தனிமையில் பேசிக் கொண்டே 
என் இரவினை கவிதையாய் மொழி பெயர்த்தேன் (மேகங்கள்...)

மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடி போகாதே ஊமைப்பெண்ணே 
நான் உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி (மேகங்கள்...)